குழித்துறை,
நாகர்கோவில் வடசேரி சந்தை மற்றும் அப்டமர்க்கெட் போன்றவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, இப்போது மார்த்தாண்டம் சந்தையிலும் கால் பதித்து விட்டது. மீன் விற்றவர், மனைவிக்கு பாதிப்பு ஏற்பட்டதால் வியாபாரிகள், மற்றும் மீன்வாங்கி சென்றவர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீன் வியாபாரி
மார்த்தாண்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான மீன், காய்கறி சந்தை உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் காய்கறி சந்தை தற்காலிகமாக மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அத்துடன், நவீன முறையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த மீன்சந்தையும் மூடப்பட்டு பக்கத்தில் உள்ள லாரி பேட்டையில் தற்காலிகமாக மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் நந்தன்காடு பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் மீன் விற்று வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் நந்தன்காடு பகுதிக்கு சென்று மீன் வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன்-மனைவி பாதிப்பு
பரிசோதனை முடிவில், மீன் வியாபாரிக்கும் அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் ஜெனின் செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் நந்தன்காடு பகுதிக்கு சென்று கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், மீன் வியாபாரியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
பொதுமக்கள் அச்சம்
மார்த்தாண்டம் சந்தையில் மீன் விற்று வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் பழகிய வியாபாரிகள், மீன் வாங்கி சென்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சந்தையில் இருந்து மீன் வாங்கி சென்ற சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
மார்த்தாண்டம் சந்தையில் மீன், காய்கறி விற்பனை செய்கிறவர்கள் முக கவசத்தை சரியாக அணியாமல் கழுத்தில் தொங்க விடுவதாக கூறப்படுகிறது. இதை ஒழுங்குப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் சந்தையில் கடந்த சில நாட்களாக மீன் வாங்க சென்றவர்கள் தாங்களாகவே பரிசோதனை செய்ய முன்வர வேண்டும். அதே சமயத்தில், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் தான் மேலும் கொரோனா பரவலை தடுக்க முடியும். வடசேரி சந்தையை போல் பாதிப்பு உருவாகாமல் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment