சூரிய கிரகணம்# Solar eclipse
இன்று (21-06-2020) நிகழவிருக்கும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணத்தை சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காண முடியும்.
தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலும் வடமாநிலத்தில் சமோலி, டெஹ்ராடூன், ஜோஷிமத், குருக்ஷேத்ரா, சிர்ஸா மற்றும் சூரத்கர் ஆகிய இடங்களிலும் பார்க்க இயலும்.
இது போன்ற வளைய சூரிய கிரகணம் இதற்கு முன் ஜனவரி 15 2010 மற்றும் டிசம்பர் 26, 2019 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நிகழ்ந்தது. நாளை நிகழும் வளைய சூரிய கிரகணத்துக்கு பிறகு இந்தியாவில் மே 21, 2031 ஆம் ஆண்டு தான் இது போன்ற கிரகணம் நிகழ உள்ளது.
சென்னையில் காலை 10:22 மணிக்கு தொடங்கும் கிரகணம் மதியம் 1.41 மணிக்கு முடியும். உச்சகட்ட கிரகணம் பகல் 11:58 மணிக்கு நிகழும். உச்சகட்ட கிரகண காலத்தில் சூரியனின் வட்டில் 34 சதவிகிதம் சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும்.
சென்னையில் பகுதி அளவு சூரிய கிரகணத்தை தான் காண முடியும். எக்காரணம் கொண்டும் வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்க கூடாது.
தொலைநோக்கி அல்லது பைனாகுலரை ஒரு ட்ரைபாடில் (tripod) பொருத்தி அதன் வழியே வரும் சூரியனின் பிம்பத்தை ஒரு வெள்ளை பரப்பில் விழச்செய்து பார்ப்பதே மிகவும் செலவு குறைந்த பாதுகாப்பான வழி.
வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும் போது நிரந்தர கண் பாதிப்பு அல்லது கண் பார்வை இழப்பு போன்றவை ஏற்பட வாய்புள்ளது.
சந்திரன் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். இதனால் சில நேரம் சந்திரன் பூமிக்கு அருகில் வருகிறது சில நேரம் பூமிக்கு வெகு தொலைவில் செல்கிறது.
அது தொலைவில் இருக்கும்போது, பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரனின் வெளிப்படையான அளவு சற்று குறைகிறது. இந்த நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால், சந்திரனால் முழு சூரியனையும் மறைக்க முடியாது.
உச்ச கட்ட கிரகணத்தின் போது மறையாத சூரியனின் விளிம்பு பகுதிகள் நெருப்பு வளையம் போல் சந்திரனை சுற்றி இருக்கும். இது தான் வளைய சூரிய கிரகணம் எனப்படுகிறது

No comments:
Post a Comment