New Zealand:
நியூசிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைரஸ் தொற்று குறைந்ததையடுத்து, ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு நாடு பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கை மீறி தனது குடும்பத்தினருடன் காரில் கடற்கரை பக்கம் வலம் வந்தது மக்களின் கவனத்திற்கு சென்றது. சுகாதார அமைச்சரே ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறி வந்தனர். தனது தவறை ஒப்புக் கொண்ட டேவிட் கிளார்க் தன்னை ஒரு முட்டாள் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து கொரோனா போன்ற நெருக்கடியான சூழலில், அவர் தனது பணியில் தொடர்ந்து இருந்தாலும், மக்களின் பார்வையில் இருந்து விலகியே இருந்தார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுடன் இணைந்து அந்நாட்டு சுகாதாரத்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மக்களிடம் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ப்ளூம்ஃபீல்ட் நடவடிக்கைகளை டேவிட் கிளார்க் விமர்சனம் செய்த போது மக்கள் ஆத்திரமடைந்தனர். தொடர் பிரச்சனையடுத்து தனது ராஜினாமாவை அறிவித்த கிளார்க், ப்ளூம்ஃபீல்டுடன் ஒரு அன்பான உறவைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இக்கட்டான சூழலில் பணியை ராஜினாமா செய்யக் கூடாது என்பதால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இதனை அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். தேர்தல் வரை கல்வி அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சுகாதார துறையை கையாள்வார் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா விளக்கமளித்துள்ளார்.

No comments:
Post a Comment